வித்தியாசமான நவக்கிரகங்கள் எங்கெங்கே உள்ளன?

நவக்கிரகங்களில் சூரியன் ஆத்மாவையும், சந்திரன் மனதையும் இயக்குகின்றன. செவ்வாய் வாக்கு வன்மையையும், வியாழன் அறிவையும், சுக்கிரன் காம இச்சை மற்றும் இந்திரியங்களையும், சனி துக்கம், நரம்பு, தசை, மரணத்தையும், ராகு யோகத்தையும், கேது ஞானத்தையும் வழங்கி உடலையும், மனதையும் இயக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நவக்கிரகங்களே மனித வாழ்க்கையை நிர்ணயிக்கின்ற ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றது. இதில், நவக்கிரகங்களில் சூரியன் ராஜாவாகவும், சந்திரன் ராணியாகவும், செவ்வாய் தளபதியாகவும், புதன் இளவரசராகவும், குரு மதி நிறைந்த அமைச்சராகவும், சுக்கிரன் பொருளாளராகவும், சனி நீதி வழங்குபவராகவும் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. அதையடுத்து, நவக்கிரக வழிபாட்டின் சிறப்பு, அதனால் கிடைக்கும் பலன், என்ன மந்திரம் கூறி வழிபடுவது, எந்தெந்த ஊர்களில் நவக்கிரகங்கள் வித்தியாச வடிவில் உள்ளனர் என்றும் பார்க்கலாம்.

வழிபாடு

பொதுவாக நவக்கிரகங்களை கோயிலில் வழிபடும்போது, அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பின்னர் கடைசியாகவே நவக்கிரகங்களை சுற்றி வருவது முறையாகும்.

அவ்வாறு சுற்றி வணங்கும்போது எந்த கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது.

நவக்கிரக வழிபாடு செய்யும்போது, சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும்.

செவ்வாயை வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும்.

புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும், அறிவாற்றல் பெருகும்.

குரு பகவானை வணங்கினால் செல்வமும், புத்திர பாக்கியமும் கிடைக்கும்.

சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

சனி பகவானை வழிபட்டால் ஆயுள் பலம்பெறும்.

ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும்.

கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும், மோட்சம் கிடைக்கும், ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

மேலும், திருஞானசம்பந்தரின் கீழ்க்கண்ட கோளறு திருப்பதிக பாடலை பாடினால் எத்தகைய துன்பமாக இருந்தாலும் நீங்கிவிடும்.

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி

சனிபாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

வித்தியாச வடிவில்

பிள்ளையார்பட்டி, விநாயகர் உடல் பகுதியின் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கிரகம் வீதம் நவக்கிரகங்கள் வீற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

மதுரையில் இருந்து 37 கி.மீ. தொலைவு தூரத்திலுள்ள நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் உள்ள நவக்கிரகங்களும் அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

வைத்தீஸ்வரன் கோயிலில் நவக்கிரகங்கள் நேர்க்கோட்டில் வக்கிரமில்லாமல், வரிசையாக ஒரே வரிசையில் நேர்க்கோட்டில் நின்று வேண்டி வணங்கும் காட்சியைக் காணலாம்.

நவக்கிரகங்கள் ஒன்பதும் ஒன்றாக வந்து வழிபட்ட திருவாரூர் தியாகராசர் திருக்கோயிலிலும் நவக்கிரகங்கள் வக்கிரமாக இல்லாமல் ஒரே வரிசையில் நேர்க்கோட்டில் இருப்பது சிறப்பு வாய்ந்தது.

கும்பகோணம், திருவையாறு சாலையில் உள்ள திருப்பழனத்திற்கு மிக அருகில் உள்ள திங்களூரில் சந்திரன் உள்பட அனைத்துக் கிரங்களும் சூரியனைப் பார்ப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலில் நவக்கிரக சன்னதிக்குப் பதிலாக, மாணிக்கவாசகர் சன்னிதானத்தில் நவக்கிரகங்கள் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

உடுப்பியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் இறைவனை நவக்கிரக கிண்டி சாளரம் என்ற ஒன்பது துவாரங்கள் வழியாகவே தரிசிக்க முடியும்.

தஞ்சை பெருவுடையார் கோயிலில் சிவனே நவக்கிரக நாயகனாக இருப்பதால், பிற கோயில்களைப் போல் நவக்கிரகங்கள் அவைகளின் உருவில் இல்லாமல் லிங்க வடிவிலேயே காட்சி தருகின்றன.

அஸ்ஸாம் கௌகாத்தி சித்ராசல் மலையில் உள்ள நவக்கிரகக் கோயிலிலும் நவக்கிரகங்கள் லிங்க வடிவிலேயே அமைக்கப்பட்டு அந்தந்த கிரகத்திற்குரிய வண்ண ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன.

இராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினத்தில் நவக்கிரகங்கள் கடலுக்குள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

தர்மபுரி அருகே இருக்கும் பாப்பாரப்பட்டி, வரதராஜ பெருமாள் கோயிலில் வேறு எங்குமே காண இயலாத வகையில், நவக்கிரகங்கள் பெண் வடிவில் காட்சியளிக்கின்றன.

இவ்வாறாக நவக்கிரகங்கள் இதேபோன்று பல்வேறு வரிசையில் மிக வித்தியாசமாக காட்சியளிக்கின்றன.

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on