பரிகார பூஜைக்கு ராகு காலம், எமகண்டம் பார்க்க வேண்டுமா?
ஒரு சிலரது வாழ்வில் எந்த காரியத்தை தொடங்கினாலும், தடங்கல்கள் ஏற்பட்டு வருவதை காணலாம். அத்துடன் வீட்டிலும் நிம்மதியின்றி எதற்கெடுத்தாலும், குடும்ப உறுப்பினர்களிடையே கோபம், சண்டை, வெறுப்பு போன்றவை இருந்து கொண்டே இருக்கும். அதனால், அந்த குடும்பத்தினர் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதுண்டு. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று பார்த்தால் ஜாதக ரீதியாக நவக்கிரகங்களின் தோஷம் ஏற்படுவது முக்கிய காரணமாக இருக்கும். அதையடுத்து, நவக்கிரகங்களின் தோஷத்திற்கு பரிகார பூஜை செய்யும் பொழுது அத்தகைய பாதிப்புகள் குறைந்து வீட்டில் நிம்மதி, தொழில் விருத்தி ஏற்படும். இந்நிலையில், பரிகார பூஜை செய்யும் போது, ராகு காலம், எமகண்டம் போன்றவற்றை கவனித்து தான் செய்ய வேண்டுமா என்பது குறித்தும், அதன் அவசியம் குறித்தும் காணலாம்.
கர்ம வினை
ஜாதகத்தில் இருக்கும் தீமையை அல்லது நடக்க இருக்கிற தீய விதியை மதியால் வெல்ல முயற்சி செய்வதே பரிகாரம் எனப்படுகிறது.
தீமையை அடைய வேண்டும் என்பது விதிப்பயன். அதற்கு, நமது கர்ம வினையே காரணகர்த்தாவாகும்.
சில பரிகாரங்களை செய்து தீவினையில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் சமயத்தில் விதி அதை தடுக்க முயற்சிக்கும்.
அதனால் தான், சில பரிகாரங்களை எவ்வளவு முயற்சி செய்து பார்த்தாலும் பலரால் செய்ய முடிவதே இல்லை.
விதி தடுக்கும்
பரிகாரம் செய்யும் நாளில் உடல் பாதிப்பு, பேரிடர் அல்லது இயற்கை சீற்றம், வீட்டில் பெண் தீட்டுப்படுதல், உறவினர் இறப்பால் தீட்டு ஏற்படுவது, பரிகாரம் செய்ய வேண்டிய கோயிலுக்கு நேரம் கடந்து செல்வதால் நடை சாற்றப்படுதல் போன்ற பிரச்சனைகள் வரும்.
ராகு காலம், எமகண்டம் போன்றவை தீய சக்திகள் பலப்படும் நேரம். அவை ஒருவருக்கு நடக்கும் நன்மையை தடுக்கத் தான் முயற்சிக்கும்.
அதனால், நவக்கிரகங்களின் தோஷத்திற்காக பரிகார பூஜையாக இருந்தாலும் அதை ராகு காலம், எமகண்டத்தில் செய்யக்கூடாது.
நல்ல நேரம்
சிலர் ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு, தங்களுக்கு என்று வரும் சமயத்தில் நல்ல நேரம், காலம் என எல்லாம் பார்த்தே செய்வார்கள்.
தோஷத்திற்காக பரிகார பூஜை செய்யும்போது, நல்ல நேரம் பார்த்துச் செய்வது நல்லது.
நல்ல நேரத்தில் சுப கிரகங்கள் பலமுடன் இருக்கும். அந்த சூழ்நிலை தீய கிரகங்களுக்கு சாதகம் ஆகாமல் போகும்.
கோயிலில் சுவாமி புறப்பாட்டிற்கே நல்ல நேரம் எல்லாம் பார்த்து தான் வீதி உலா கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.