பாரம்பரியத்தை மீட்டெடுப்போம்
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம், ஆடை, உணவு பழக்கவழக்கம் போன்ற அனைத்தும் வெளிப்படும். நவீனமயம், புதுமை என்ற பெயரில் தொலைக்கப்படுகிற பாரம்பரியத்தை வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடைபிடிக்கவும், மீட்டெடுக்கவும் முன் வரவேண்டும்.
பாரம்பரியம்
பண்டைய கால மக்களின் பழக்க வழக்கம், மரபுகள், நினைவு சின்னங்கள், பொருட்கள் மற்றும் வாழ்வின் தொடர்புடைய அனைத்தையும் உள்ளடக்கியதே பாரம்பரியமாகும்.
இது, பரம்பரை, பரம்பரையாக ஒரு தலைமுறையினரிடமிருந்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதாகும்.
தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படும் பண்டிகையில் தை பொங்கல் விழாவும், மாட்டு பொங்கல் விழாவும் முக்கியமாகும்.
விவசாயத்திற்கு பெரும் துணையாக இருகின்ற சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் படையல் வைத்து வழிபடும் திருநாளே பொங்கல் தினமாகும்.
அதேபோல், உழவுக்கும், விவசாயிகளுக்கும் பெரும் துணையாக இருக்கின்ற பசு மாடு, காளை மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விழாவே மாட்டு பொங்கல் பண்டிகையாகும்.
இவை பாரம்பரியமாக ஜாதி, இனம், மதம், மொழி, உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரன், படித்தவர், படிக்காதவர் போன்ற வித்தியாசமின்றி ஒட்டுமொத்த தமிழர்கள் கொண்டாடுவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
பாரம்பரிய விளையாட்டு
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழர்களின் வீர விளையாட்டான காளைகளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு அல்லது மஞ்சு விரட்டானது பாரம்பரிய விளையாட்டாக உள்ளது.
இது துணிச்சலான இளைஞர்களின் வீர விளையாட்டாக கருதப்படுகிறது.
பண்டைய காலத்தில் தமிழகம் முழுவதுமே விளையாடப்பட்ட இந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, ஈரோடு, தருமபுரி மாவட்டங்களிலும், மதுரையில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு போன்ற ஒரு சில இடங்களில் மட்டுமே பாரம்பரியமாக விளையாடப்பட்டு வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு போன்றே கபடி, சிலம்பம், கோ கோ, ஆடு புலி ஆட்டம் போன்றவைகள் இன்றைக்கும் பல இடங்களில் விளையாடப்படுகிறது.
இது தவிர பாரம்பரிய விளையாட்டுகளாக கோலி குண்டு, பல்லாங்குழி, பச்ச குதிரை, பம்பரம், கிட்டிப்புள், சாட் பூட் திரி, தட்டாங்கல், கள்ளன் போலீஸ் போன்ற விளையாட்டுகள் உள்ளன.
இவைகள் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன. இன்னும் 20 ஆண்டுகளில் இந்த விளையாட்டுகள் அனைத்தும் முற்றிலுமாக மறைந்துவிடும் அபாயத்தில் உள்ளது.
பாரம்பரிய விளையாட்டுகள் மூலமாக ஒற்றுமை, விட்டுக்கொடுக்கும் பக்குவம், சேமிப்பு, பகிர்ந்து உண்ணுதல் போன்ற பண்புகள் ஏற்படும்.
ஆனால், பெருகி வரும் கலாச்சார மாற்றத்தின் காரணமாக, 2 வயது குழந்தை முதலாகவே இன்றைக்கு மொபைல் ஃபோனுக்கு அடிமைகளாகி பாரம்பரியத்தை தொலைத்து வருகிறோம்.
அதனால், வாழ்க்கை முறை, பழக்க வழக்கம் மாறுவதுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்குதான் ஏற்படுகிறது.
ஒரு குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்றால், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீர்வு காண்பது வழக்கமாகும்.
அதுபோல், நமது பாரம்பரியத்திற்கு பாதிப்பு என வரும்போது, ஒட்டுமொத்த தமிழர்களும் ஒன்று திரண்டு பாரம்பரியத்தை மீட்க அல்லது பாதுகாக்க முன்வரவேண்டும்.
பாரம்பரியம் என்றால் என்ன? எதற்காக அதை மீட்கவேண்டும் என்பதை உங்கள் உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட செய்யுங்கள் (ஷேர் செய்யுங்கள்).