மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் என்ன?

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கை பந்தத்தை இணைத்து வைப்பது தான் திருமணம் ஆகும். திருமணத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் எத்தனையோ இடம் பெற்றாலும், மணமகளுக்கு, மணமகன் தாலி கட்டுவது தான் முக்கிய நிகழ்ச்சியாகும். சுற்றமும், நட்பும் சூழ வந்திருந்து வாழ்த்த, பெரியோர்கள் முன்னிலையில் மணமகன், மணமகளுக்கு தாலி கட்டும்போது மூன்று முடிச்சு போடப்படுகிறது. இவ்வாறு தாலிக்கயிற்றில் மூன்று முடிச்சு போடுவது எதற்காக என்று பார்க்கலாம்.

மூன்று நிலை

இந்து மத சம்பிரதாயப்படி திருமணத்தின் ஒவ்வொரு சடங்கிலும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது.

தாலி கட்டும்போது போடப்படுகிற மூன்று முடிச்சு என்பது, விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்னும் மூன்று நிலைகளை குறிக்கிறது.

இந்த மூன்று நிலையிலும் ஒரு பெண் தெய்வீக உணர்வுடன் இருக்க வேண்டும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மை மிக்கவளாக திகழ வேண்டும்.

தெய்வ பக்தி, குடும்ப பெரியவர்களிடம் மதிப்பு, கணவரிடம் அன்பு ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.

சாட்சி

அறம், பொருள், இன்பம் என வாழ்க்கை நடத்துவோம் என்பதைக் குறிப்பது தான் மூன்று முடிச்சு ஆகும்.

இறைவன், தேவர்கள் மற்றும் விண்ணவர்களின் சாட்சியாக போடப்படுவது முதல் முடிச்சு.

முன்னோர்களின் சாட்சியாக போடுவது இரண்டாவது முடிச்சு.

பெற்றோர்கள், திருமணத்திற்கு வருகை தந்தவர்களின் சாட்சியாக கட்டப்படுவது மூன்றாம் முடிச்சு.

மும்மூர்த்திகள்

முதல் முடிச்சு போடும்போது, தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆரோக்கியமாகவும், சிறந்த அறிவாளியாகவும் திகழ, படைக்கும் கடவுளான பிரம்மாவையும், ஞானத்தை ஊட்டும் சரஸ்வதி தேவியையும் வணங்கி, முதல் முடிச்சு போடப்படுகிறது.

குடும்பத்தைக் காப்பதற்கும், எளியவர்களுக்கு உதவி செய்வதற்கும் தேவையான செல்வச் செழிப்புடன் வாழ்வதற்காக, காக்கும் கடவுளான திருமாலையும், செல்வங்களை அள்ளித்தரும் லட்சுமியையும் வணங்கி இரண்டாவது முடிச்சு போடப்படுகிறது.

உலகம் அமைதியாக இருப்பதற்கு, எங்கும் தர்மம் நிலவ வேண்டும். அநீதிகளை எதிர்க்கவும், அக்கிரமங்களை தட்டிக் கேட்கவும், இன்னல்களிலிருந்து தன் குடும்பத்தை பாதுகாப்பதற்குமான துணிச்சல் வேண்டும் என்பதற்காக சிவபெருமானையும், வீரத்திற்கு அடையாளமாக பார்வதி தேவியையும் வணங்கி மூன்றாவது முடிச்சு போடப்படுகிறது.

மற்றொரு விளக்கம்

ஒரு பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க வேண்டும் என்பதற்காக முதல் முடிச்சு.

கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டாவது முடிச்சு.

நல்ல குழந்தை பெற்று சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும் என்பதற்காக மூன்றாவது முடிச்சு.

அறிவுரை

ஒரு பெண் மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும்போது அவளுக்கு நெருக்கமான மூன்று பேருடைய அறிவுரைகளும், ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன.

முதலாவது தாயின் ஆலோசனை.

இரண்டாவது பாட்டி போன்ற மிகுந்த அனுபவசாலி ஆக ஒரு பெண்மணியின் ஆலோசனை.

மூன்றாவதாக அந்த பெண்ணுக்கு சம வயதுள்ள ஆனால் முன்பே திருமணம் ஆன மற்றொரு பெண்ணின் ஆலோசனை.

லலிதா சகஸ்ர நாமத்தில்

அம்பிகையின் சிறப்பை கூறும் லலிதா சகஸ்ர நாமத்தில், காமேச பந்த மாங்கல்ய சூத்ர சோபிதா கந்தரா என்று அம்பிகை போற்றப்படுகிறாள்.

சிவபெருமானால் கட்டப்பட்ட திருமாங்கல்ய கயிறு அலங்கரிக்கும் அழகான கழுத்தை உடையவள் என்பது இதன் பொருள்.

எத்தனை கோடி ஆபரணங்களை அணிந்தாலும் அம்பிகைக்கு அழகு சேர்ப்பது அவள் அணிந்திருக்கும் மஞ்சள் கயிறு தான்.

இதைத்தான் ஆதிசங்கரர், சௌந்தர்ய லஹரியில் அம்பாளின் திருமாங்கல்ய மகிமையைப் போற்றுகிறார்.

எத்தனை நகை அணிந்தாலும், சம்பிரதாயத்தின் சின்னமான மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யத்தைக் கட்டிக்கொள்வதே சிறப்பு என்பதை இது உணர்த்துகிறது.

அர்த்தம் புரிந்து திருமண சடங்கை செய்வோம்!

சடங்கை மதித்து திருமணத்தின் புனிதத்தை காப்போம்!

திருமணத்தில் மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் என்ன என்ற தகவலை உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on