மழையை கொடுக்கும் மாவிளக்கு வழிபாடு

செவ்வாய் கிழமைகளில் அம்மனை வழிபாடு செய்வது மிகுந்த நன்மையை கொடுக்கும் என்பதால், இந்நாளில் பெரும்பாலான பெண்கள் அம்மனை வழிபடுவது வழக்கமாகும். அவ்வாறு வழிபடும்போது, அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வழிபட வீட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் நன்மை கிடைக்கும் என்று தேவிபுராணம் கூறுகிறது.

எதற்காக மாவிளக்கு?

மாரியம்மன், காளி, துர்க்கை, மீனாட்சி, காமாட்சி, மகாலட்சுமி போன்ற பெண் தெய்வங்களிடம் வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனை நிறைவேறும்போது பக்தர்கள் மாவிளக்கு எடுப்பது வழக்கம்.

அதேபோல், நீண்ட நாட்களாக தீராத நோய், கடன் பிரச்சினைகளால் அவதியடைந்தவர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

இடித்த பச்சரிசி, வெல்லம், ஏலக்காய் போன்ற கலவையை விளக்கு வடிவில் செய்து தீபம் ஏற்றுவதே ‘மாவிளக்கு’ ஆகும்.

இவ்வாறு மாவிளக்கு எடுப்பது எதற்காகவெனில், உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கின்ற அன்னமே பிரம்ம ஸ்வரூபமாகும்.

வெல்லத்தை போன்று அம்பிகையும் இனிமையாக மதுரமானவளாக இருக்கிறாள்.

அதனால், அனைத்து உயிர்களுக்குள்ளும் மதுரமான அம்பிகையே வீற்றிருக்கின்றாள்.

மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் அன்னை, மாவிளக்கேற்றும் குடும்பத்தை காப்பதாக ஐதீகம்.

வழிபாடும், நன்மையும்

வீடு, கோயில் போன்ற இடங்களில் மாவிளக்கு ஏற்றும்போது, முதலில் கோலம் போட்டு, அதன் மீது வாழை இலை விரித்து, அதில் மாவிளக்கை வைத்து அதில் தூய நெய்யை விட்டு விளக்கேற்ற வேண்டும்.

நன்கு சலித்து எடுத்த பச்சரிசி மாவுடன், வெல்லப்பாகு காய்ச்சி ஊற்றி ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி, பச்சை கற்பூரம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவேண்டும்.

அதன் பின், அதில் தேவையான அளவு நெய் சேர்த்து உருண்டையாக இல்லாமல் தட்டி மேலே குழியாக கைவிரல் வைத்து அழுத்தி தீபம் ஏற்றுவதற்கு வசதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அந்த குழிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

மாவிளக்கு ஏற்றுபவர்கள் எப்போதும் ஒற்றைப்படையில் போடக்கூடாது. இரண்டு அல்லது நான்கு தீபங்கள் ஏற்றுவது நல்லது.

அவ்வாறு ஏற்றப்படும் மாவிளக்கானது குறைந்தது 21 நிமிடங்களாவது எரிய வேண்டும்.

அப்போது தேவி சஹஸ்ரநாமம், அம்மன் பாடல்கள், போன்றவற்றை படித்து, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் உடைத்து நைவேத்தியம் காட்டவேண்டும்.

வழிபாடு முடிந்ததும், தேங்காய் நீரை மாவில் விட்டு கலந்து பிசைந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுப்பது நல்லதாகும்.

மாவிளக்கு போடுவதால் அதிக நன்மைகள் உண்டு.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் மகாலட்சுமிக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

விரதம் இருக்கும் நாளில் மாவிளக்கு போடுவதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

பிரச்சனைகள் நீங்கி செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும்.

ஆடி, ஐப்பசி, கார்த்திகை போன்ற மாதங்களில் மாவிளக்கு போடுவதால் மழை பெய்யும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

தொழில், வியாபாரம், குடும்ப விருத்திக்காக குல தெய்வம் கோயிலுக்கு செல்லும்போது மாவிளக்கு போடுவதும் நல்லது.

அதனால், சுப காரியங்கள் தடையின்றி நடக்கும், தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.

மாவிளக்கை எப்படி தயார் செய்து தீபமேற்ற வேண்டும் என்பதை உங்கள் உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட செய்யுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on