குடும்பத்தில் கணவன், மனைவி எப்படி இருக்கவேண்டும்?

குடும்பம் என்றால் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். அதற்காக, எதற்கெடுத்தாலும் கணவரை குறை சொல்லும் மனைவியோ, மனைவியை குறை சொல்லும் கணவரோ இருந்தால் அந்த குடும்பத்தில் நிம்மதியும், அமைதியும் இருக்காது. இந்நிலையில், பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகளை சேருமா? என்பதற்கும், குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் எப்படி இருக்க வேண்டும் என்றும் காஞ்சி பெரியவர் கூறிய விளக்கம் என்னவென்று காண்போம்.

கணவன், மனைவி

காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்தில் ஒரு சமயம் காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முகாமிட்டிருந்தபோது, ஒரு கணவனும், மனைவியும் பெரியவரை தரிசிப்பதற்காக மடத்திற்கு வந்திருந்தார்கள்.

கணவன், மனைவி இருவரும் தங்கள் மகனின் மனநல பாதிப்பு நிவர்த்தியாக வேண்டுமென்று வேண்டி வந்தனர்.

கணவராலும், அவரது வீட்டை சேர்ந்தவர்களாலும்தான் தனது மகனுக்கு அவ்வாறு ஆகிவிட்டதாக அவரது மனைவி கருதினாள்.

அதனால், எந்த நேரமும் அவரது கணவர் மீது, மிகுந்த கோபம் கொண்டு சதா திட்டிக்கொண்டே இருந்தாள்.

இந்நிலையில், கணவன், மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து காஞ்சி மடத்திற்கு வந்து காஞ்சி பெரியவரை சந்திப்பதற்காக காத்திருந்தபோது, திடீரென கணவரை பார்த்து கோபத்தோடு எழுந்து கணவரை விட்டு சற்றுத்தள்ளி போய் அவரது மனைவி அமர்ந்து கொண்டார்.

இதை உள்ளிருந்து கவனித்துக்கொண்டிருந்த பெரியவர், தனது சீடரை அழைத்து அந்த பெண்ணை மட்டும் உள்ளே அழைத்து வரும்படி கூறினார்.

மகானின் அறிவுரை

காஞ்சி பெரியவரின் அறைக்குள்ளே சென்ற அந்த பெண் பெரியவரை வணங்கி, தனது மகனின் நிலைக்கு தீர்வு கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு நின்று கொண்டிருந்தாள்.

அதைக்கண்ட காஞ்சி பெரியவர், அந்த பெண்ணை இருக்கையில் அமரும்படி கூறினார்.

உன்னுடைய மகனின் மனநல பாதிப்பிற்கு உன்னுடைய கணவன் வழி உறவினர்கள் யாரும் காரணம் கிடையாது.

ஆனால் நீயோ, தேவையின்றி உனது கணவரையோ, அவரது உறவினர்களையோ திட்டிக்கொண்டே இருப்பதன் மூலம், உன்னுடைய மகன் உடல்நிலை நிச்சயமாக சரியாகாது.

அடுத்தவர்களை எப்போதும் தூற்றிக்கொண்டே இருப்பவர்களை அந்த அம்பாள் கூட நிச்சயம் மன்னிக்க மாட்டாள்.

உன் மகனுக்கு தானாகவே அவனது மனநல பாதிப்பு சரியாகி விடும் என்று காஞ்சி பெரியவர் கூறியதும், அந்த பெண்ணுக்கு பெரும் ஆச்சரியமாகி விட்டது.

நாம் எதுவும் சொல்லாமலேயே, நம் மனதிற்குள் இருப்பதை காஞ்சி பெரியவர் அப்படியே சொல்கிறாரே என்று நினைத்து பிரமித்துவிட்டாள்.

அடுத்தவர்களால் எந்த கஷ்டமும், நஷ்டமும் யாருக்கும் வராது.

அவரவர் செய்த கர்ம வினையின் மூலமாகத்தான், ஒருவருக்கு நன்மையையும், தீமையும் ஏற்படும்.

ஒரு சிலருக்கு பிறந்ததிலிருந்தே நன்மை நடக்கும். வேறு சிலருக்கு சில காலம் கழித்து நன்மை நடக்கும்.

இன்னும் சிலருக்கு கடைசி வரை நன்மை என்பதே நடக்காமலேயே போய்விடும். அது அவரவருடைய கர்ம வினைப்பயன்.

நீ தினமும் ஸ்லோகங்கள் படிப்பதும், சுவாமிக்கு பூஜை செய்வதும் உனக்கு கிடைத்த கொடுப்பினையாகும்.

தினமும் வீட்டை சுத்தம் செய்து பூஜை செய்து வாசலில் கோலம் போட்டு, விளக்கேற்றுவது மங்கலகரமாக இருப்பதற்குத்தான்.

ஆனால், இதை எல்லாம் செய்துவிட்டு மனதில் அழுக்கோடு இருந்தால் உனது கஷ்டங்கள் என்றும் தீராது, என்று அவளுக்கு அறிவுறுத்தினார்.

எனவே என்றும் எப்போதும் கணவன், மனவிக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போக வேண்டும்.

கணவன், மனைவிக்குள், நானா, நீயா என்ற போட்டி இருக்கக்கூடாது.

அவ்வாறிருந்தால் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் வராது என்று கூறினார்.

அதன் பின்னர் அவரது கணவரையும் அழைத்து, அவரிடமும் மனைவிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறி இருவருக்கும் பிரசாதம் கொடுத்து ஆசி வழங்கினார்.

ஒருவருக்கு வரக்கூடிய கஷ்டங்களுக்கு என்றுமே அடுத்தவர்கள் காரணம் கிடையாது என்பதை உங்கள் உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட செய்யுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on