கார்த்திகை பௌர்ணமி பூஜையின் சிறப்பு
மாதந்தோறும் வருகிற பௌர்ணமி தினத்தன்று செய்கிற பூஜைக்கே மிகுந்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிற நிலையில், மகத்துவம் வாய்ந்த கார்த்திகை பௌர்ணமியின் சிறப்பை யாராலும் கூற முடியாது என்று சிவபெருமானே கூறியிருக்கிறார். அதையடுத்து அதன் சிறப்பு என்னவென்று அறிந்திடுவோம்.
சித்தர்கள் விளக்கம்
வானில் முழு நிலவும் ஒளி வீசும் தினமே பெளர்ணமி தினமாகும்.
அத்தகைய பெளர்ணமியில் சுமார் 108 வகைகள் இருப்பதாக சித்தர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக பௌர்ணமி தினமானது அதன் திதிக்கு தகுந்தாற்போல், பகலில் தொடங்கி இரவில் முடிவது, பாதி பகலும், பாதி இரவுமாகவும் அமைவதுண்டு.
சில நேரங்களில் இரவில் தொடங்கி பகலில் முடிவது என பௌர்ணமியில் பல்வேறு வகைகள் உள்ளன.
எனவே, அதன் தன்மைகளுக்கேற்ப விரத வழிபாட்டு முறைகளை கையாண்டால் முழுமையான பலனை அடைந்திடலாம் என்று சித்தர்கள் விளக்கமளிகின்றனர்.
கார்த்திகை தீபமும், பௌர்ணமியும்
கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரத்தன்றுதான் பெரும்பாலும் பெளர்ணமி வரும்.
அன்றைய தினத்தில்தான், சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக காட்சியளித்தார்.
அதன் காரணமாகவே, திருக்கார்த்திகை தீபமாக திருவண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றுவது வழக்கம்.
ஆனால், இந்த வருடம் கார்த்திகை பௌர்ணமிக்கு 2 நாட்களுக்கு முன்பாகவே கிருத்திகை வந்து விட்டதால், 2 நாட்கள் முன்னதாவே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுவிட்டது.
இந்நிலையில், கார்த்திகை பெளர்ணமி நாளன்றும் வீடுகள் மற்றும் கோயில்கள் என அனைத்து இடங்களிலும் ஏற்றப்படுகிற தீபத்திற்கு, யாகம் நடத்துவதன் பலன் கிடைக்கும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
எனவே தான், சிவபெருமானே மலையாக இருக்கின்ற திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவது மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பொதுவாக பெளர்ணமி தினத்தன்று அன்னை பராசக்தி மற்றும் சத்ய நாராயணரை வழிபட்டு பூஜை செய்வது மிகவும் சிறப்பானதாகும்.
மேலும், பெளர்ணமி தினத்தன்று வீட்டிலும், கோயிலிலும் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் அனைத்து நன்மைகளையும் பெற முடியும்.
கார்த்திகை பௌர்ணமி நாளில் வீட்டில் ஏற்றப்படும் தீபத்தின் மகிமையை உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் (ஷேர் செய்யுங்கள்).