download_indicator

ஏழரை சனியால் இத்தனை நன்மைகளா!

கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி பகவான் தான். அதனால் தான் அவரை சனீஸ்வரர் என்கிறோம். 12 ராசிகள் கொண்ட இராசிச் சக்கரத்தை கடக்க சனி பகவான் 30 ஆண்டுகளை சராசரியாக எடுத்துக் கொள்வார். வேறு எந்த கிரகங்களும் இவ்வளவு கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளாது. அதன்படி 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு ராசிக்கு ஏழரை சனி வந்தே தீரும். யாருமே அதில் இருந்து தப்பிக்கவே முடியாது. ஏழரை சனி என்றால், ஜென்ம ராசிக்கு பன்னிரண்டாவது ராசி, ஜென்ம ராசி, ஜென்ம ராசிக்கு இரண்டாவது ராசி ஆகிய ராசிகளில் சனி சஞ்சரிக்கும் பொழுது ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் என்ற கணக்கில் வருவது ஏழரை சனி என்று அழைக்கப்படுகிறது. அதையடுத்து, அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், அதற்கான பரிகார தீர்வு குறித்தும் பார்க்கலாம்.

நன்மைகள்

பலருக்கும் ஏழரை சனி காலத்தில் தான் திருமணம் நடைபெறும்.

இது விளையாட்டாக தெரிந்தாலும், ஆனால் இது தான் உண்மை.

ஏழரை சனி காலத்தில், சனி பகவான் நிறைய பொறுப்புகளை கொடுத்து சுமக்க வைப்பார். உண்மையில் கல்லை காயப்படுத்துவது உளியின் நோக்கம் அல்ல. அதே போல் தான் உங்களை காயப்படுத்துவது சனியின் நோக்கம் அல்ல.

மோட்சம்

நாம் ஒவ்வொருவருமே நமது முன் வினை பாவங்களை தீர்க்க தான் பிறக்கிறோம். அதன் பிறகு இறக்கிறோம்.

உலக வாழ்க்கையின் மீது இருக்கும் ஆசையால் தான், இவ்வாறு பல பிறவி எடுத்து வருகிறோம்.

இவ்வாறு பிறக்கும் உயிர்களை பல அனுபவங்களை கொடுத்து தனது ஏழரை சனியின் காலத்தில் பற்றை அறுக்க செய்வது தான் சனிபகவான் நோக்கம். அவ்வாறு செய்வதால் அவர் மோட்சத்திற்கு வழி காட்டுகிறார்.

காரணப் பெயர்கள்

ஏழரை சனி மட்டும் அல்ல,8 ஆம் இடத்தில் வரும் சனிக்கு அஷ்டம சனி என்பது பெயர்.

4 ஆம் இடத்திற்கு வரும் சனிக்கு அர்த்தாஷ்டம சனி என்பது பெயர்.

7 ஆம் இடத்திற்கு சனி வரும் காலத்திற்கு கண்டக சனி என்பது பெயர்.

பரிகாரங்கள்

சனி பகவானுக்கு புகழ்பெற்ற திருத்தலம், புதுச்சேரி மாநிலம், காரைக்காலுக்கு அருகே உள்ள, திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம் ஆகும்.

இங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி, விநாயகரை வணங்கி, பின்பு சனீஸ்வரரை வணங்கி வரவேண்டும்.

இங்கு வந்து செல்லும் பக்தர்களை சனி பகவான் எப்போதும் காத்து வருகிறார்.

உங்களுக்குப் பிடித்த அல்லது உங்கள் குலதெய்வத்திற்கு நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்கி வாருங்கள்.

கோயில் தீபங்களுக்கு சனிக்கிழமையில் நல்லெண்ணெய் வாங்கித் தாருங்கள்.

சபரிமலை செல்பவர்களுக்கு கருப்பு வஸ்திரம் வாங்கித் தருவது கூட சனியின் தாக்கத்தை குறைக்கும்.

திருஞானசம்பந்தர் பாடிய கோளறு பதிகம் சொல்லி வர சனியின் தாக்கம் மட்டும் அல்ல, நவக்கிரகங்களால் ஏற்பட இருக்கும் ஊழ்வினை பலன்களும் கூட சரி செய்யப்படும்.

சனி மூல மந்திரம்

ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ,

சனி ஸ்தோத்திரம்

நீலாஞ்ஜன ஸமாபாஸம்

ரவிபுத்ரம் யமாக்ரஜம்!

ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்

தம் நமாமி சனைச்சரம்!!



Follow Us on