1008 முறை திருவண்ணாமலை கிரிவலம் சாத்தியமா?
திருவண்ணாமலை என்றாலே கிரிவலம்தான் என்று கூறுமளவிற்கு, இன்று உலகம் முழுவதும் பிரபலமாக இருப்பது எல்லோரும் அறிந்ததே. அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவண்ணாமலையில் எதற்காக 1008 முறை கிரிவலம் செல்ல வேண்டும். அது எல்லோருக்கும் சாத்தியமாகுமா என்றும் அறிந்திடலாம்.
பௌர்ணமி கிரிவலம்
மாதந்தோறும் வருகிற பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் சென்று எந்த தெய்வத்தை வணங்கினாலும் அதன் ஆற்றல் முழுமையாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பௌர்ணமியன்று கிரிவலம் செல்லும் பழக்கம் திருவண்ணாமலையில்தான், உலகிலேயே முதன் முதலாக தோன்றியது என்று கூறப்படுகிறது.
மேலும், அன்னை பார்வதி தேவிதான், முதன் முதலாக திருவண்ணாமலையை கிரிவலம் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் ஒருவர் கிரிவலம் செல்ல வேண்டும் என்றால், அவருக்கு அதற்கான கொடுப்பினை இருக்க வேண்டும்.
இல்லையென்றால், அவர் திருவண்ணாமலை இருக்கும் திசை பக்கமே எட்டிப்பார்க்கக்கூட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று தை மாத பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்வதன் மூலமாக, சந்திரனின் பூரண ஒளி உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையையும், மனதிற்கு அமைதியையும், உற்சாகத்தையும் கொடுக்கும் என்பது நம்பிக்கை.
இவ்வாறு கிரிவலம் செல்லும் பழக்கம் திருவண்ணாமலை அருகே உள்ள பர்வத மலை, சென்னை சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து ஓரகடம் செல்லும் சாலையில் உள்ள திருக்கச்சூர் மலைக்கோயிலான மருந்தீஸ்வரர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், சோளிங்கர் நரசிங்க பெருமாள் கோயில் போன்ற இடங்களில் தற்போது விரிவடைந்துள்ளது.
எதற்காக 1008 முறை?
14 கி.மீ. தொலைவு கொண்ட திருவண்ணாமலை கிரிவல பாதையை ஒருவர் பக்தியுடன் வலம் வந்தால் 100 சதவீதம் பலன் கிடைக்கும்.
பக்தியின்றி, பொழுதுபோவதற்காகவோ, பரிகாரம் செய்வதற்காகவோ, ஆய்வு செய்வதற்காகவோ எந்த பெயரில் வலம் வந்தாலும் அதற்கும் 100 சதவீதம் பலன் கிடைக்கும்.
அந்தளவிற்கு மகத்துவம் வாய்ந்தது திருவண்ணாமலை கிரிவலம்.
அவ்வாறு கிரிவலம் வருகையில் மழை வரும்போது, மழைக்கு ஒதுங்காமல் கிரிவலம் செல்பவருக்கு சிவபெருமானின் அருளால் வாழ்வில் உயர்ந்த நிலையும், முக்தியும் நிச்சயம் கிடைக்கும் என்று அருணாச்சல புராணம் கூறுகிறது.
இந்நிலையில், ஒருவர் எவ்வளவு பெரிய பாவங்கள் செய்திருந்தாலும், அவர் 1008 முறை திருவண்ணாமலையை கிரிவலம் செய்திருந்தால், அவருக்கும் மறுபிறப்பில்லாத நிலை கிடைக்கும்.
திருவண்ணாமலையில் 1008 முறை கிரிவலம் செய்யும்போது, அனைத்து பாவங்களும் கரைந்து புண்ணியவானாக மாறும் ஆற்றல் கிடைக்கும்.
மேலும், அவ்வாறு கிரிவலம் செய்தவரின் கர்மவினைகள் அனைத்தும் நெருப்பிலிட்ட பஞ்சு போன்று முற்றிலும் எரிந்து விடும் என்று அகஸ்திய முனிவர் கூறுகிறார்.
சாத்தியமா?
சாதாரணமான மனிதர் ஒருவர் தனது வாழ்வில் 1008 முறை திருவண்ணாமலை கிரிவலம் சாத்தியமாகுமா என்றால், அதற்கு வாய்ப்பில்லை என்றேதான் கூற முடியும்.
ஆனால், திருவண்ணாமலையில் வசித்த விசிறி சாமியார் போன்ற பல்வேறு மகான்கள் 1008 முறை கிரிவலம் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் 1008 முறை கிரிவலம் செல்லும் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால், அங்கேயே குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் தங்கியிருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
முடியும் என்றால் முடிக்க முடியாதது என்று எதுவுமே இல்லை, எல்லாம் சாத்தியமே.
திருவண்ணாமலையில் ஒருவர் எதற்காக 1008 முறை கிரிவலம் செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது என்பதை உங்கள் உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட செய்யுங்கள் (ஷேர் செய்யுங்கள்).